கொப்புரு மீனின் கொம்பு குற்றியதில் மீனவர் மரணம்.
ஆழ்கடலில் வைத்து மீன் கொம்பு குற்றியதில் ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர்.
அவர்கள் கடந்த (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது வலையில் சிக்கிய பெரிய மீனை தூக்குவதற்கு முயற்சி செய்யும் போது தவறி கடலில் விழுந்த ஒருவர் மீது கொப்புரு மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் குற்றியதால் குறித்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் குற்றியதால் காயத்துடன் படகில் ஏறியவர் தனக்கு மீன் குற்றிவிட்டது, வலி அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளதுடன், மற்ற இருவரும் அவரை கரைக்கு கொண்டுவரும் வழியில் மதியம் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் இறந்தவரின் உடல் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸாரும் மீன்பிடி துறைமுக கடல் ஓர பாதுகாப்பு படையினரும் நடாத்தி வருகின்றனர்.
