சுடச்சுடக் கிடைத்த அதிரடித் திருப்பம்: முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கம்பிகளுக்கு பின்னால்!
இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (05) முற்பகல் வாக்குமூலம் ஒன்ற வழங்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்தபோதே, அதிகாரிகள் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கைதின் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில், தனது அலுவலகப் பணிகளுக்காக எனக்கூறி 4 ஊழியர்களை அவர் நியமித்துள்ளார். ஆனால், அதில் மூன்று ஊழியர்களை தனது சொந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலைக்கு அமர்த்தியுள்ளார் என்பதுதான் இதில் வெளிவந்துள்ள பிரதான குற்றச்சாட்டாகும். எஞ்சிய ஒரு ஊழியரும் அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசுப் பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தின் பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு, தனிப்பட்ட வியாபாரத்தை கவனித்து வந்த இந்த மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. குறித்த 4 ஊழியர்களுக்காகவும் அரசாங்கத்தினால் ரூபா 27 லட்சத்து 68 ஆயிரத்து 836 ரூபாய் 14 சதம் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டுள்ள நிலையில், இதன்மூலம் அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசு சொத்துக்களையும் ஊழியர்களையும் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரின் இந்த விவகாரம், அரசியல் களத்தில் பெரும் காரசாரமான விவாதங்களை கிளப்பியுள்ளது.


