நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எச்.எம். மின்ஹாஜ் இன்று காலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நுரைச்சோலை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை கல்பிட்டி பிரதேச சபை தவிசாளராக இருந்த சமயம் வேறொருவருக்கு குத்தகைக்கு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் நேற்றைய தினம் அவர் கைதுசெய்யப்பட்டார்.
தாம் கல்பிட்டி பிரதேச சபை தவிசாளராக இருந்தபோது, சட்ட ரீதியாக குறித்த காணியை வேறொரு நபருக்கு குத்தகைக்கு பெற்றுக்கொடுத்ததாகவும், அதற்கான சகல ஆவணங்களும் தம்மிடம் இருப்பதாகவும் கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எச்.எம். மின்ஹாஜ் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.
இருந்த போதிலும் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான குறித்த காணி தொடர்பாக ஏற்கனவே வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த காணியில் உள்ள கடையை உடனடியாக அகற்றுமாறு கூறிய அரச உத்தியோகத்தருடன் நேற்று வாக்குவாதத்துடன் ஈடுபட்டத்திற்கு பலி தீர்க்கும் வகையிலே தமது கைது இடம்பெற்றுள்ளதாகவும், தாம் ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பொய்யான செய்தி பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த காணி தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கின்ற சமயம், நேற்றைய தினம் விடயத்திற்கு பொறுப்பான குறித்த அரச உத்தியோகத்தர் அரசியல் அழுத்தங்களினால் தம்முடன் எவ்வித நியாயமுமின்றி முரண்பட்டதாக எம்.எச்.எம். மின்ஹாஜ் கவலை தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே தாம் நேற்றைய தினம் கல்பிட்டி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, இன்று காலை விடுவிக்கப்பட்டதாகவும் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.
மேலும் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எச்.எம். மின்ஹாஜ் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
