இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் நமது குழந்தைகள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறார்களா? இந்த கேள்விக்கு உலகையே உலுக்கும் வகையில் அதிர்ச்சிகரமான பதிலைக் கொடுத்துள்ளது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநில நீதிமன்றம். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய முன்னணி சமூக வலைத்தளங்களின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ (Meta), தனது தளங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் பேராபத்துகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கத் தவறிவிட்டது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து, $567 மில்லியன் டொலர் அபராதத்தை அதிரடியாக விதித்துள்ளது.
இது வெறுமனே ஒரு சாதாரண நீதிமன்றத் தீர்ப்பு அல்ல; சமூக வலைத்தளப் பெருநிறுவனம் ஒன்றுக்கு எதிராக இதுவரை விதிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரிய அபராதமாகும்! இந்த வழக்கில் ஏற்கனவே விதிக்கப்பட்ட $375 மில்லியனையும் சேர்த்து, மெட்டா செலுத்தியாக வேண்டிய மொத்த அபராதத் தொகை இப்போது $942 மில்லியன் டொலராக (கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர்) உயர்ந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி பிரையன் பீட்ஷைட் வெளியிட்ட கருத்துக்கள், ஒட்டுமொத்த தொழிநுட்ப உலகையுமே ஒரு கணம் தலைகீழாக உலுக்கியெடுத்துள்ளன.
சமூக வலைத்தளங்களின் வரம்பற்ற ஆதிக்கம் என்பது காற்றை மாசுபடுத்தும் நச்சு வாயுவைப் போன்ற ஒரு “பொதுக் தொல்லை” (Public Nuisance) எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த அபராதப் பணம் முழுவதையும் எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான சிறப்பு நிதியத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். ஆனால், உலகத்தையே தனது விரல் நுனியில் வைத்துள்ள மெட்டா நிறுவனம் இந்த அதிரடித் தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொள்ளப் போகிறதா என்றால், அதுதான் இல்லை!
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வன்மையாக மறுப்பதாகவும், இதற்கெதிராக உடனடியாக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மெட்டா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அதிரடியாக அறிவித்துள்ளார். ஆனால், மெட்டாவிற்கு நெருக்கடி இதோடு முடியப்போவதில்லை என்பதுதான் நிஜம். ஏற்கெனவே லொஸ் ஏஞ்சலிஸில் இதுபோன்ற வழக்கில் தோற்றுப்போன மெட்டா, தற்போது அமெரிக்கா முழுவதும் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பில் நூற்றுக்கணக்கான அடுக்கடுக்கான வழக்குகளை எதிர்கொண்டு திணறி வருகின்றது.
டிஜிட்டல் உலகின் பிக்பாஸாக வலம்வந்த மெட்டாவிற்கு வீசப்பட்டுள்ள இந்த சட்ட வலை, இனிவரும் நாட்களில் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டையும் சிறுவர்களின் பாதுகாப்பையும் எந்த திசைக்குக் கொண்டு செல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


