நல்லதன்னிய: நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கி இன்று (22) காலை 7.30 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த த்ரீவீலர் ஒன்று, நல்லதன்னியா மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகில் வீதியை விட்டு விலகி, சுமார் 10 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுக் கவிழ்ந்தது.
வளைவுகள் நிறைந்த அந்த ஆபத்தான பாதையில் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தின் வேகம், த்ரீவீலரில் பயணித்தவர்களின் உயிரையே பறிக்கும் அளவுக்குக் கொடூரமாக அமைந்தது.
இந்த கோரச் சம்பவத்தில் நல்லதன்னியா, முல்கம கீழ் பிரிவைச் சேர்ந்த 46 வயதான கந்தசாமி செல்வம் மற்றும் 26 வயதான இராமலிங்கம் திவாகர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேவேளை, த்ரீவீலரில் பயணித்த மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இதில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த இரு சிறுவர்களும் அடங்குவது அதிர்ச்சியையும் வேதனையையும் இரட்டிப்பாக்கியுள்ளது.
விபத்து நடந்தவுடனேயே ஓடிவந்த பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர்களின் நிலைமையைக் கருத்திற் கொண்டு மேல் சிகிச்சைக்காக அவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்துக்கான பின்னணி என்ன, வாகனக் கோளாறா அல்லது வீதியின் வழுக்கும் தன்மையா என்பது குறித்து நல்லதன்னிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



