கல்பிட்டி – கண்டக்குளி குடாவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தொன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை 7.50 மணியளவில் குடாவ பகுதியிலிருந்து கரையோரமான வீதி வழியாக கல்பிட்டி பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று வருவதைக் கண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், திடீரெனப் பதற்றமடைந்துள்ளார்.
அந்தப் பதற்றத்தில் மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரித்துக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியோரத்திலிருந்த கம்பம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் மிகக் கொடூரமாக மோதியுள்ளது. இந்த அதிர்ச்சி விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய துஷ்மந்த ரோஹண (40) மற்றும் அவரது 6 வயது மகன் ரவின் கனிஷ்க ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அவசர அவசரமாக கல்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்து நடந்த தருணத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தின் நடுவே மற்றுமொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளைச் செலுத்திய துஷ்மந்த ரோஹண (40) உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த முற்பட்ட போது, அவரது காற்சட்டைப் பையிலிருந்து 5 மில்லிகிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


