தனியே யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல. ஆளணிகள் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் வைத்திருக்க முடியாது. ஏனைய 4 மாவட்டங்களுக்கும் யாழ் மாவட்டத்திலிருந்தே ஆளணிகளைப் பங்கீடு செய்யவேண்டியுள்ளது. அந்தப் பங்கீட்டை உரியவாறு முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (22.10.2025) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் ஒரு மாத காலத்தினுள் தயார் செய்யப்பட வேண்டும். திட்டங்கள் தயாரிக்கப்படும்போது திணைக்களத் தலைவர்கள் அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, அதன் தேவைப்பாடுகளை உரியவாறு மதிப்பீடு செய்யவேண்டும். திட்டங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் மாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
வாழ்வாதார உதவிக்கான திட்டங்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தாலும் அவை அதன் நோக்கத்தை முழுமையாக எட்டவில்லை. எனவே அவ்வாறான திட்டங்கள் தயாரிக்கப்படும்போது கூடுதல் அவதானம் தேவை. குறிப்பாக மத்திய அரசாங்கத்தாலும் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் மாவட்டச் செயலர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதிக்கு மேலதிகமாக தூய்மை இலங்கை செயற்றிட்டம் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்கள் ஊடாக மேலதிக நிதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, அதற்குரிய திட்டங்களையும் திணைக்களத் தலைவர்கள் தயாரிக்கவேண்டும்.
மாவட்டங்கள், பிரதேசங்களுக்கு என்று நிதிகளைப் பங்கீடு செய்யாமல் எந்தப் பிரதேசங்களுக்கு தேவைகள் அதிகமோ அங்கு கூடியளவு நிதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும். அதற்கு ஏற்றவாறே திட்டங்களும் தயாரிக்கப்பட வேண்டும்.
கடல்கடந்த தீவுகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவை, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார் ஆளுநர்.
2025ஆம் ஆண்டு திட்டங்களை முன்னெடுக்கும்போது எதிர்கொண்ட சவால்கள் தொடர்பில் குறிப்பாக சில திட்டங்களுக்கான கேள்விகோரல்களை வெளியிட்டபோது ஒப்பந்தகாரர்கள் யாரும் அதற்கு விண்ணப்பிக்காமை தொடர்பாகவும் திணைக்களத் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதனை அடுத்த ஆண்டு எவ்வாறு சரி செய்வது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், திணைக்களத் தலைவர்கள் அதற்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் சிறப்பாகச் செயற்படும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான கௌரவிப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு திணைக்களத்தில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் தகுதியில்லாத திணைக்களத் தலைவர்கள் அல்லது பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான இடமாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.
சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்தாலும் உடனடியாக வந்து அவற்றைப் பார்வையிடுவதில்லை என மக்களால் முறைப்பாடு முன்வைக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அதிகாரிகளின் இத்தகைய பின்னடிப்பு நடவடிக்கைகள் மீது மக்களால் சந்தேகம் எழுப்பப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆளணி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்போது தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு சேவைப் பிரமாண குறிப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சுச் செயலாளர்களை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். அத்துடன் ஒவ்வொரு பணியாளரதும் தனிப்பட்ட கோவைகள் உரிய காலத்துக்கு காலம் இற்றைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், பணியாளர் ஒருவர் ஓய்வுபெற்று ஒரு மாத காலத்தினுள் அவருக்கான ஓய்வூதியம் கிடைக்கப்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதேவேளை, கடந்த காலங்களில் பிழையான ஒன்றைச் செய்து வந்தால், அந்தப் பிழையைத் தொடர அனுமதிக்குமாறே சில தொழிற்சங்கங்கள் கோருகின்றன எனக் குறிப்பிட்ட ஆளுநர், அதனைத் திருத்த முற்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என எச்சரிக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது தொடர்பில் அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், இதில் மாற்றத்தை ஏற்படுத்த அதிகாரிகள் இறுக்கமான நடவடிக்கை எடுத்தேயாகவேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.
இதன் பின்னர் அமைச்சுச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களால் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.