மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போரினால் லெபனானில் மனிதாபிமான நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. கடந்த ஒரு வார கால மோதலில் 84 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 6.6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இரு முக்கிய முகமைகள் தெரிவித்துள்ளன.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் மிகக்கடுமையான வான்வழித் தாக்குதல்களால் அந்நாட்டின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, இந்த மோதலில் இதுவரை மொத்தம் 486 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,313 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 259 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“வெறும் ஏழு நாட்களாக நடைபெறும் இந்த மோதலில், கிட்டத்தட்ட 100 குழந்தைகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்,” என்று லெபனானுக்கான WHO பிரதிநிதி அப்தினாசிர் அபூபக்கர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட் போன்ற அடர்த்தியான நகர்ப்புறங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்துவதே அதிகப்படியான குழந்தைகள் உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
லெபனானில் தற்போதைய இடப்பெயர்வு விகிதமானது, 2023-24 காலகட்டத்தில் ஏற்பட்ட மோதலை விட மிக வேகமாக அதிகரித்து வருவதாக ஐ.நா. அகதிகள் முகமை (UNHCR) எச்சரித்துள்ளது.
6,67,000-க்கும் அதிகமான மக்கள் இதுவரை இடம்பெயர்ந்துள்ள இதேவேளை, சுமார் 1,20,000 பேர் அரசு முகாம்களில் தங்கியுள்ளனர்; மற்றவர்கள் உறவினர்கள் வீடுகளிலும், கார்களிலும், நடைபாதைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் பிறப்பித்த வெளியேற்ற உத்தரவுகள் மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மருத்துவமனைகள் மற்றும் முதலுதவி குழுக்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி 5 மருத்துவமனைகள் முழுமையாகச் சேவையை நிறுத்தியுள்ளன. மேலும் 4 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதுடன் 43 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
லெபனான் மக்கள் ஏற்கனவே கடந்த காலப் போர்களில் தங்கள் வீடுகளையும் உறவினர்களையும் இழந்த நிலையில், இந்த முறையும் எவ்வித தாமதமுமின்றி பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்து வருவதாக UNHCR பிரதிநிதி கரோலினா லிண்டோம் பில்லிங் தெரிவித்துள்ளார்.





