வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சி கவிழ்ந்தபின், முதல் முறையாக இன்று பொதுத்தேர்தல் தொடங்கியது.
வங்கதேசத்தில் கடந்த 2024 ஜூலையில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நிர்வாக பொறுப்பேற்றது.
இந்நிலையில், மாணவர்கள் எழுச்சிக்குப் பிறகு முதல் முறையாக இன்று வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேசம் தேசியவாத கட்சி (பிஎன்பி) கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மேலும், இக்கட்சி 11 கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இதை எதிர்த்து இஸ்லாமிய ஜமாத் இ இஸ்லாமி கட்சி போட்டியிடுகிறது. கடந்த டிசம்பரில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகள் வெளிநாட்டில் தஞ்சமடைந்து இருந்த நிலையில், ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு சமீபத்தில்தான் நாடு திரும்பினார்.
அந்த வகையில் ஷேக் ஹசீனாவின் பதவி நீக்கத்திற்குப் பிறகு வங்கதேசம் அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிலையில், இன்றைய தேர்தலில் மக்கள் தமது வாக்குப்பதிவை மேற்கொண்டு வருகின்றனர்.



