பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது
2025.06.05 அன்று கொழும்பு 11, செட்டியார் தெருவில் உள்ள இரண்டு நகைக் கடைகளில் ரூ.102,000,000/= ( பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய்) கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுக் கொள்ளை விசாரணைப் பிரிவு, நடத்திய விசாரணையில், 05 சந்தேக நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஐவரும், கொஸ்கம, ஹன்வெல்ல, தங்கொட்டுவ, மில்லேவ மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 முதல் 46 வயதுக்குட்பட்ட இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றுபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் சட்டபூர்வமான சோதனை நடத்துவது போல் தங்க ஆபரணக் கடைகள் இரண்டுக்குள் சென்று, அங்கிருந்து பத்து கோடி இருபது இலட்சம் ரூபா பணத்தை கைப்பற்றி அங்கிருந்த ஏழு ஊழியர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களில் நான்கு பேரிடம் சட்டவிரோத சிகரெட்டுகள் இருந்ததாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திவிட்டு, கொண்டு செல்லப்பட்ட பணத்தில் சுமார் ஐந்து கோடி ரூபாவை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அடையாள அணிவகுப்புக்காக 2025.11.07 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


 
 
 
