எமக்கு மிக வேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது. வடக்கு மாகாணம் இந்தியாவின் உதவிகளை நம்பியிருக்கின்றது. எங்களுக்கு இதுவரை உதவிகளை வழங்கிய இந்திய மக்களுக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் வடக்கு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களிடமிருந்து மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (28.05.2025) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,
முல்லைத்தீவு மாவட்டச் செயலராக நான் பணியாற்றியிருக்கின்றேன். இங்குள்ள கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்கு மிக நன்றாகவே தெரியும். போரால் பாதிக்கப்பட்ட நீங்கள் மீள்குடியமர்வின் பின்னர் சட்டவிரோத மீன்பிடியால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள். உங்கள் பெறுமதியான வலைகளையும் இழந்திருந்தீர்கள். இன்று இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் உங்களுக்கு பெறுமதியான வலைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குகின்றனர்.
இந்திய மக்களும், இந்திய அரசாங்கங்களும் எங்களுக்கு காலத்துக்கு காலம் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தன. முக்கியமாக இந்திய வீட்டுத் திட்டத்தை குறிப்பிடவேண்டும். அவர்களால் எமது ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டன. இன்றைய தினம் முல்லைத்தீவு மருத்துவமனையின் புனரமைப்பை இந்தியா பொறுப்பேற்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அறிவித்திருக்கின்றார். அதற்கு அவருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன். எதிர்காலத்திலும் எமது மக்களுக்கான உதவிகளை இந்தியா தொடரவேண்டும், என்றார் ஆளுநர்.
இதன் பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் விசேட உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கான குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் வலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தூதுவர் சந்தோஷ் ஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
