இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஊடக சந்திப்பு இன்று 22.10.2025 இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தலைமையில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
2026ம் ஆண்டு ஆசிரியர் இடமாற்றமானது, சேவையின் தேவைகருதிய என்ற போர்வையில் வடமாகாண கல்வியமைச்சினால் முறைகேடாக, நீதிக்கு புறம்பான இடமாற்றம் இடம்பெற்றிருக்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 82 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வந்துள்ளது.
இந்த இடமாற்றத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. ஆசிரியர்களின் நலன்களை கருதாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலைமையை கருதாமல் போரினால் கல்வியை இழந்து பின்தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வியை மேலும் பாதிக்கின்ற வகையில் இடம்பெற்றிருக்கின்றது என ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளை கண்டித்துள்ளது.
82 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 60 பேர் வரை 2009 யுத்த காலத்தில் பதுங்கு குழிகளில் யுத்த எறிகணைகளுக்கு மத்தியில் கடமையாற்றியவர்கள், கடந்த கால சேவைகளையும் ஆராயாமல் அவர்ளின் இடமாற்றமானது அடிப்படை மனித உரிமை மீறப்படுகின்ற விடயம் என சுட்டிக்காட்டியுள்ளது.
போர் முடிய உயர் ல்வியை கற்று ஆசியர் தொழிலுக்கு வந்தவர்களுக்கு கூட இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. புவிசார் நிலமைகளை கூட ஆராயாமல் ஒவ்வொரு பாடசாலைகளுக்குமிடையில் பல கிலோ மீற்றர் தூரம் கொண்ட கிராஞ்சி, வேரவில் போன்ற போக்குவரத்து வசதியில்லாது பல வருடங்கள் கடமையாற்றியவர்கள் இவர்களையும் இடம்மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
நாங்கள் எங்கும் பணியாற்றக்கூடியவர்கள் அதன் உறுதிப்பாட்டில் நாங்கள் உள்ளோம். ஆசிரியர் பற்றாக்குரை மாவட்டத்தில் நிலவுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் வெற்றிடங்களை நிரப்பிக்கொண்டு ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு இடம்மாற்றத்தை வழங்க வேண்டும்.
தற்போது வெளியிட்டுள்ள ஆசிரிய இடம்மாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தி எதிர்வரும் 24ம் திகதி கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப்பணிமனை முன்பாக பிற்பகல் 2.00மணிக்கு இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து ஆசிரியர்களும் பொது அமைப்புக்களும் பெற்றோர்களும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்திருந்தார் செயலாளர் இன்னாசிமுத்து சத்தியசீலன்.