இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவரின் உறவினர் ஒருவரின் இட மாற்றத்திற்காகவே அப்பாவி ஆசிரியர்களைக்கொண்டு போராட்டம் நடத்துவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபசெயலாளர் காராளசிங்கம் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்
இம்முறை இடமாற்றமானது வழமை போன்று இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் கிளிநொச்சியிலிருந்து மடு, மன்னார், துணுக்காய், முல்லைத்தீவு வலயங்களுக்கு சிலர் இடமாற்றமாகி சென்றிருக்கின்றனர். சிலர் என்று குறிப்பிடுவதற்கு காரணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனியே ஒன்பது ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அந்த ஒன்பது ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.
பல ஆசிரியர்கள் இருந்த போதும் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது. இடமாற்ற சபை என்பது ஒரு நியாயமான சபை, இதனை மீறி அரசியல் நிகழ்ச்சிக்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதே போல இன்று நான்கு சங்கங்களும் சேர்ந்து ஒரு கொள்கையை வகுத்தன, வட மாகாணத்திற்கென்ற அந்த கொள்கை ஊடாக இடம்மாற்றத்தை கொண்டு செல்லும் போது, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஒருவருடைய சகோதரியின் இடமாற்றம் இரத்து செய்யப்படவில்லை என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே தாங்கள் இந்த இடம்மாற்றத்திலிருந்து வெளியேறுவதாக தெரிவித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் துரோகம் செய்து வெளியேறியுள்ளனர்.
சைக்கிள் கட்சியுடன் செயற்படும் அந்த ஆசிரியர் சங்கம் வெளிமாவட்டம் செல்வதை தடுக்க வேண்டும் என்று நேற்றும் அதற்கு முன்னைய தினமும் போராட்டம் செய்தனர்.
இது கண்டிக்க தக்க விடயம். இடமாற்ற சபை உள்ளது அதனைவிட மேன்முறையீடு செய்யலாம் அதனை விடுத்து சாதாரண ஆசிரியருக்கு ஒரு சட்டமும் உறுப்பினரின் உறவினருக்கு ஒரு சட்டமுமாக காட்டுமிரான்டி தனமாக செயற்படுகின்றனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். இந்ந சங்க போராட்டத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்துள்ளனர். போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர், பல வருடமாக தூர பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது அவர்களுக்கு கவலை இல்லையா, நாங்கள் அவர்களை மீட்க முயற்சிக்கின்றோம் ஆனால் இவர்களோ உறுப்பினரின் சகோதரிக்காகவே போராடுகின்றனர். இதற்கு அரசியல் வாதிகளும் உடன்படுகின்றனரா என சந்தேகம் எழுகின்றது என தெரிவித்தார்.
