வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இன்று (15) காலை இடம்பெற்றது.
கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றின் பிரநிதிகளுக்கிடையில் பொது நோக்கம் ஒன்றை அடிப்படையாக கொண்டு வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் இணைந்து ஒரு நிர்வாகத்தை உருவாக்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு மாநகர முதல்வர் பதவியும், பிரதி முதல்வர் பதவி ஜனநாயக தேசிய கூட்டணிக்கு முதல் இரண்டு வருடங்களுக்கும், தமிழரசுக் கட்சிக்கு அடுத்த இரு வருடங்களுக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தவிசாளர் பதவி தமிழரசுக் கட்சிக்கும், உபதவிசாளர் பதவி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உபதவிசாளர் பதவியை இரண்டு வருடங்களுக்கு பகிர்வது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் சக்தியும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழரசுக் கட்சிக்கு தவிசாளர் பதவியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு உபதவிசாளர் பதவியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தவிசாளர் பதவியும், தமிழரசுக் கட்சிக்கு உப தவிசாளர் பதவியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன், முத்து முகமது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் சிறி ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.