ஜூட் சமந்த
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையினால் மக்கள் பெரும் துயரங்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்து, வென்னப்புவ பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விறகு சுமை தாங்கியபடி சபை அமர்வில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
வென்னப்புவ பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு கடந்த 07ஆம் திகதி அதன் தலைவர் அன்டன் குமார தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சுசந்த பெர்னாண்டோ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், விறகு கட்டுகளைத் தலையில் சுமந்தவாறு சபைக்குள் நுழைந்தனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக சாதாரண மக்கள் அன்றாட உணவைத் தயாரிப்பதற்கு கூட வழியின்றி விறகு அடுப்புகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்த நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச சபையின் நுழைவாயிலில் இருந்து சபை மண்டபம் வரை விறகு கட்டுகளைச் சுமந்து வந்த உறுப்பினர்கள், அரசாங்கத்தின் விலை உயர்வுக் கொள்கைகளுக்கு எதிராகத் தமது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.



