அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ, போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணைக்காக நியூயார்க் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது அமெரிக்கா ‘போதைப்பொருள் தீவிரவாதம்’ மற்றும் கொக்கைன் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க உளவுத்துறை மற்றும் ராணுவப் படையினர் இணைந்து வெனிசுலா தலைநகர் கராகஸில் அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ‘யுஎஸ்எஸ் ஐவோ ஜிமா’ போர்க்கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்டனர்.
சனிக்கிழமை இரவு 8.52 மணியளவில் புரூக்ளினில் உள்ள மெட்ரோபாலிட்டன் தடுப்புக்காவல் சிறையில் மதுரோ அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நியூயார்க் தெற்கு மாவட்ட ஃபெடரல் நீதிமன்றத்தில் மதுரோ மற்றும் அவரது மனைவி இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணியளவில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதிபர் மதுரோ அடைக்கப்பட்டுள்ள சிறையானது 1990ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதும், இங்கு ஏற்கனவே ஆர்.கெல்லி, சீன் டிட்லி கோம்ப்ஸ் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மாயோ போன்ற பிரபல குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





