ஜூட் சமந்த
வென்னப்புவ பகுதியில் வீதியில் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையடித்து வந்த நபர் ஒருவரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று 8ஆம் திகதி மாலை, வென்னப்புவ – வைக்காலை, அங்கம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரை அப்பகுதி மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வைக்காலை பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை சந்தேகநபர் அறுத்துக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதன்போது அப்பெண் எழுப்பிய கூச்சலைக் கேட்டு அவ்விடத்திற்கு வந்த பொதுமக்கள் சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இது போன்ற கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



