ஜுட் சமந்த
சுற்றுச்சூழலை அழித்து, சட்டத்தின் கண்களில் மண்ணை தூவி இயங்கிவந்த சட்டவிரோத நிழல் உலக வியாபாரம் ஒன்றிற்கு வென்னப்புவை பொலிஸார் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
வென்னப்புவை – போலவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில், எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி மணல் அகழ்வு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசரத் தகவலையடுத்து, கடந்த 12ஆம் திகதி மாலையில் இந்த அதிரடி வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
திடீரென சம்பவ இடத்திற்குள் நுழைந்த பொலிஸ் குழுவைக் கண்டு அங்கிருந்த ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த முற்றுகையின் போது, குறித்த சட்டவிரோத நிலையத்தை நடத்திச் சென்ற உல்ஹிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய உரிமையாளர் மற்றும் அங்கு பணிபுரிந்த இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட 4 பேக்கோ (JCB) இயந்திரங்கள் மற்றும் மணல் சுத்திகரிக்கும் அதிநவீன இயந்திர தொகுதிகளையும் பொலிஸார் கைப்பற்றினர். இருப்பினும், கைப்பற்றப்பட்ட கனரக இயந்திரங்களை உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டதால், அவை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அதே இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற சாட்சியத்திற்காக அங்கிருந்த மணல் மற்றும் மண் மாதிரிகளை பொலிஸார் சேகரித்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். வென்னப்புவை பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் சதசிரி தலைமையிலான குழுவினரே இந்தச் வெற்றிகரமான சட்ட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.


