ஜூட் சமந்த
வென்னப்புவ மற்றும் நாத்தாண்டியா பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இருவர் லுனுவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, மாரவில பகுதியில் பொலிஸ் சோதனையின் போது போதைப்பொருளுடன் மூவர் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 18ஆம் திகதி தும்மோதரை மற்றும் தில்லவல பகுதிகளில் லுனுவில பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட முதல் சந்தேகநபரிடமிருந்து 45 கிராம் 650 மில்லிகிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளும், 22 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மற்றைய சந்தேகநபரிடமிருந்து 16 கிராம் 360 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 கைபேசிகள், ஒரு இலத்திரனியல் தராசு, போதைப்பொருள் பொதியிட பயன்படும் பொலித்தீன் உறைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, இன்று (19) அதிகாலை மாரவில பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் சிலாபம் – கொழும்பு வீதியில் பயணித்த வான் ஒன்றை மறித்து சோதனை செய்துள்ளனர். இதன்போது அந்த வானினுள் 30 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வானில் இருந்த மூன்று நபர்கள் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த வானிலிருந்து 5 கைபேசிகள் மற்றும் ஒரு பணப்பை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பணப்பையில் இருந்த அடையாள அட்டையின் அடிப்படையில், தப்பியோடியவர்களில் ஒருவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


