பீகாரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கூட்டணி சார்பில் பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் இன்று பதவியேற்றார்.
நிதிஷ் குமார், முதல்வராக 10வது முறையாக பதவியேற்றுள்ளார்.
பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி. நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களான யோகி ஆதித்யநாத், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் துணை முதல்வர்களாக பாஜவின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹாவும் (2வது முறை) ஆகியோர் பதவியேற்றனர்.
இவர்களைத் தவிர ஜேடியூவைச் சார்ந்த விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவன் குமார், அசோக் சவுத்ரி, லேசி சிங், மதன் சஹானி, சுனில் குமார், முகமது ஜமா கான் ஆகியோரும் பாஜகவைச் சேர்ந்த மங்கள் பாண்டே, திலீப் குமார் ஜெய்ஸ்வால், நிதின் நபின், ராம் கிருபால் யாதவ், சஞ்சய் சிங் திகார், அருண் சங்கர் பிரசாத், சுரேந்திர மேத்தா, நாராயண் பிரசாத், ராமா நிஷாத், லக்கேந்திர குமார் ரௌஷன், ஷ்ரேயாஷி சிங், பிரமோத் குமார் ஆகியோரும் பதவியேற்றனர்.
ஜே.டி.(யு) தனது தற்போதைய அமைச்சர்களைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்றாலும், பாஜக சில புதிய முகங்களைக் கொண்டு வரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளான மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தலைமையிலான எல்ஜேபி (ராம் விலாஸ்), ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான எச்ஏஎம்-எஸ், உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) ஆகியவற்றுக்கு முறையே 2-1-1 என அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. விழாவுக்குப் பிறகு கட்சிகளால் இலாகாக்கள் மற்றும் முழு அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்படும்.




