ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட ‘ஆறுதல் சிகிச்சை’ (Palliative Care) சேவைப் பிரிவு கடந்த (06) அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. இந்த அலகின் முதல் நோயாளியை அமைச்சரே உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்து வைத்தார்.
உயிருக்கு அச்சுறுத்தலான நோய்களினால் (இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு போன்றவை) பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இந்தச் சேவையின் முக்கிய நோக்கமாகும்.
வலி நிவாரணம், உடல் மற்றும் உளச்சமூக ரீதியான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளிகளின் துன்பங்களைக் குறைக்க இச்சேவை உதவுகிறது. இந்த அலகில் இதற்கெனப் பயிற்சி பெற்ற விசேட நிபுணர்கள் மற்றும் தாதியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஹொரண, இங்கிரிய மற்றும் மொரகஹஹேன உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 10 இலட்சம் மக்களுக்குச் சேவை வழங்கும் இந்த வைத்தியசாலையில் நிலவும் வசதிக் குறைபாடுகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இடைநிறுத்தப்பட்டிருந்த ஆறு மாடிக் கட்டிடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க இந்த ஆண்டு 150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் (Tenders) மீளக் கோரப்பட்டு, எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
வைத்தியசாலைக்குத் தேவையான மேலதிகப் பணியாளர்களை நியமிப்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நிதி அமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேசிய மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டின் அனைத்து சுகாதார நிறுவனங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
அரசியல் ரீதியான சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை போதுமானது எனவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் அபேசிங்க, ஓஷானி உமங்கா, வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ரசிகா லியனகே மற்றும் ஏனைய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.



