தித்வா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முறையான தீர்வு கோரியும், தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற வலியுறுத்தியும் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட தித்வா புயல் காரணமாக புத்தளம், வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு சின்ன நாகவில்லு பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்றுடன் 102 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அப்பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ள நீர் இதுவரையில் வெளியேற்றப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வெள்ளத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 26 குடும்பங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில்,
- வெள்ள நீர் வெளியேற்றம்: நூறு நாட்களைக் கடந்தும் வடியாமல் இருக்கும் வெள்ள நீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இழப்பீடு வழங்கல்: புயல் மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட சொத்து மற்றும் வாழ்வாதார இழப்புகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.
- நிரந்தர தீர்வு: தொடர்ச்சியாக வெள்ள அபாயத்திற்குள்ளாகும் இப்பகுதி மக்களுக்குப் பதிலாக, பாதுகாப்பான வேறு இடங்களில் வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.
பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள், இறுதியில் வண்ணாத்திவில்லு உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் தமக்கு, அதிகாரிகள் இனியாவது விரைவான தீர்வை வழங்க வேண்டும் என்பதே சின்ன நாகவில்லு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.





