இன்று அதிகாலை (10.02.2025) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 17 வயது சிறுவன் உட்பட மூவர் ஒரு வாகனத்தில் அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை வழிமறித்தபோது பொலிஸாரின் சமிக்ஞையை மீறி வாகனம் தொடர்ந்து பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த நல்லூர் மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த இருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



