1990 ஜூன் 11- விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 600 முஸ்லிம் பொலிஸ்காரர்கள்.
அரசு மேலிடத்து உத்தரவின்படி சரணடைந்தும், விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட600 முஸ்லிம் பொலிஸ்காரர்கள்!
இன்று 11 ஆம் திகதி 35 வருடங்கள்!!
கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலயங்கள் கடந்த 1990.06.11 ஆம் திகதி விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது அன்றிருந்த அரசின் மேலிடத்து உத்தரவின் பேரில் ஆயுதங்கள் தம் வசம் இருந்தும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் சரணடைந்த சுமார் 800 பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 600 பேர் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களாகும்.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் 116 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு மேலிடத்து உத்தரவின்படி சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டு திருக்கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றின் சமவெளியில் வைத்து விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த நடேசனின் மேற்பார்வையில் கண்களும் கைகளும் கட்டப்பட்டு சுடப்பட்டிருக்கிறார்கள்.
பொலிஸ்காரர்களின் இந்தப் படுகொலைகள் விடுதலைப் புலிகள் செய்த கொலைகளுடன் இதுவும் ஒன்றாகக் கருதிவிட முடியாது.
இப்படுகொலைகள் அன்றிருந்த அரசாங்கத்தின் சரியான வழிகாட்டல்கள் பொலிஸ்காரர்களுக்கு வழங்கப்படாமல் அரச அனுசரணையோடு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாகக் கருதக்கூடிய பாரிய படுகொலையாகும்.
பொலிஸ்காரர்களின் இந்தப் படுகொலைகள் நடந்து இன்று 11 ஆம் திகதியுடன் 35 வருடங்கள் கடந்தும் இது தொடர்பான மர்மங்கள் இன்னும் அகலவில்லை.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மறைந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன அன்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமைகள் ஆகியோர்களுக்கே இப்படு கொலைகளின் மர்மங்கள் தெரியும்.
விடுதலைப் புலிகளின் கிழக்கு கட்டளைத் தளபதியாகச் செயல்பட்ட கருனா அம்மான் என்றழைக்கப்பட்ட விநாயக மூர்த்தி முரளிதரன் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பொறுப்பில் இருந்த போதிலும் பொலிஸ்காரர்களின் இந்தப் படு கொலைகளுக்குரிய பின்னணியை அவரின் ஆட்சியில் கண்டறிய முற்படவில்லை.
இது விடயத்தில் மஹிந்த அரசாங்கம் தவறிவிட்டதா? இல்லை கருனா அம்மான் என்றழைக்கப்பட்ட விநாயக மூர்த்தி முரளிதரனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கண்டும் காணாதது போல் இருந்து மறைத்து விட்டதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.
1990 ஜுன் 11 ஆம் திகதி அன்று நிராயுதபாணியான இந்த பொலிஸ்காரர்கள் விடுதலைப் புலிகளின் ஆணைகளுக்கு இணங்கியிருந்தபோதிலும் சரணடைந்த நிலையிலும் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதானது பிரிவினைவாத யுத்த வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாகும்.
விடுதலைப் புலியினர் 600 பொலிஸ்காரர்களையும் படுகொலை செய்த சமயத்தில் கருணா அம்மான் என்றழைக்கப்பட்ட விநாயக மூர்த்தி முரளிதரன் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக 2004 ஆம் ஆண்டு வரை சேவையாற்றியிருந்தார். இந்நிலையில் இப்படுகொலைக்கு தாம் பொறுப்புதாரி அல்ல எனவும் தான் அச்சமயத்தில் வடக்கில் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பொலிஸ்காரர்களின் இப்படுகொலைகள் இடம்பெற்று இன்று 35 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இது விடயத்தை நினைவு கூரும் நாம் அவர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
அன்று கடத்தப்பட்டு தப்பி வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது அனுபவத்தை இப்படி தெரிவித்துள்ளார்…..
35 வருடங்களுக்கு முன்…..1990 ஜூன் மாதம் 11 ஆம் திகதி..பொலிஸ் சார்ஜன்ட் ஆக இருந்த போது விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலாங்கொடை பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் அல் ஹாஜ் நஜீமுதீனின் திகில் அனுபவம்.
தமிழ் சகோதரர் ஒருவர் உணவும் பாதுகாப்பும் தந்து உறங்க வைத்தார். நெற்றியில் திருநீறு பூசி என்னை தமிழ் கிராமத்துக்கு அழைத்து சென்று பின் என்னை பள்ளிவாயலில் ஒப்படைத்தார்.
இரத்தக் கறையுடன் காட்டில் பாய்ந்து விடியும் வரை புதருக்குள் மறைந்திருந்தேன். ஜனாதிபதி ஆர். பிரேமதாச எங்களை சரணடையுமாறு அன்று எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார். கருணா எங்களை கொன்று விடுமாறு உத்தரவு வழங்கியிருந்தார். நான் இறந்து விட்டதாக பொலிஸ் அறிவித்திருந்ததால் வீடு திரும்பிய என்னை வீட்டார் அச்சமடைந்து வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
பொலிஸ் சேவையில் இருந்த அநேகமான தமிழ் அதிகாரிகள் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டனர். 1990 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு திருக்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட 79/78 பேரில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஒருவரான பலாங்கொடையை சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் அப்துல் லத்தீப் நஜிமுதீன் அவர்கள் புலனாய்வு ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடன் நடத்திய நேர்காணலில் தெரிவித்த திகில் அனுபவங்கள் பற்றிய விபரம் வருமாறு,
இவர் தற்போது ஒரு பிரபலமான இரத்தினக்கல் வர்த்தகராக உள்ளார். பலாங்கொடை பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவராக தற்போது கடமையாற்றுகிறார். ஒரு சிறந்த சமூகப் பணியாளராககல்வி சமூகப் பணிகளுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருகிறார்.
அன்று 1990 ஜூன் 11 ஆம் திகதி அக்கறைப்பற்று பொலீஸ்நிலையம் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டது. 78 பொலீஸ் உத்தியோகத்தர்கள் கடத்தி செல்லப்பட்டு திருக்கோவில் நெசவு நிலையம் ஒன்றில் கைகள் (பின்னால்) கட்டப்பட்டு கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டு துப்பாக்கிகளால் நாம் சுடப்பட்டோம்.
தெய்வாதீனமாக என் மீது துப்பாக்கி சூடுபடவில்லை. சூடு நடத்தப்பட்ட பின் அவர்கள் ஒவ் வொருவராக யாராவது உயிருடன் இருக்கிறார்களா என பரீட்சிப்பதற்காக எங்களின் உடம்புகளில் ஏறிப் பார்த்தனர். என் உடம்பிலும் ஏறி நடந்தனர். நான் மிகவும் பொறுமையாக வலியை தாங்கினேன்.
பக்கத்தில்இருந்த தடித்த பொலீஸ் அதிகாரியின் தோல் பட்டையில் தலை வைத்து இறந்தது போல நடித்தேன். என் முகத்திலும் உடம்பிலும் அடுத்தவர்களின் உடல் சிதறிய இரத்தம் ஓடியது. அனைவரும் இறந்து விட்டார்கள் என உறுதிப்படுத்திக் கொண்ட அவர்கள் கிரனைட் ஒன்றையும் எம்மீது வீசினார்கள். அதில் ஒரு துண்டு என் நெற்றியில் பட்டது.
எமது பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றிய தமிழ் அதிகாரியின் சகோதரர் ஒருவர் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்தார். இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற உள்ளதாக எமது OIC இற்கு அவரே தகவல் வழங்கி இருந்தார். எனவே, OIC சம்பவம் இடம் பெறும் போது பொலீஸ் நிலையத்தில் இருக்கவில்லை.
நாம் சுற்றி வளைக்கப்பட்டுள்ள விடயத்தை பொலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்த போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி பேசிக் கொண்டு இருப்பதால் எங்களை அவர்களிடம் சரணடையுமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. பொலீஸ் நிலையத்திலிருந்த தமிழ் அதிகாரிகள் கொல்லப்படவில்லை அவர்கள் வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
முன்னாள் இராணுவ தளபதி டென்சில் கொப்பேகடுவவிடமும் நான் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் உயிர்த்தப்பி வந்த எனக்கு பதவி உயர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. ஒரு இலட்சம் ரூபா அன்பளிப்பு பணம் மட்டும் கிடைத்தது. அதன் பின் சேவையிலிருந்து நான் விலகினேன்.
இந்தளவு பாதிக்கப்பட்ட நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்கள்? பணம் வேண்டுமா பதவி உயர்வு வேண்டுமா? அதனை அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் கூறுங்கள் என ஊடகவியலாளர் சமுதித கேட்ட போது, எனக்கு எதுவும் வேண்டாம் என்னோடு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நியாயத்தைப் பெற்று கொடுக்குமாறு வேண்டுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏ.எல்.ஜுனைதீன், ஊடகவியலாளர்.