Friday, May 30, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News78 மாணவர்களை கொட்டித் தீர்த்த தேனீக்கள்!

78 மாணவர்களை கொட்டித் தீர்த்த தேனீக்கள்!

ஒட்டுசுட்டானில் தேனீ கொட்டியதில் 78இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் இன்று 30.05.2025 தேனீக்கொட்டிற்கு இலக்காகி 78இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார்.

அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை நேரடியாகச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகக் கடுமையாக எச்சரித்ததுடன், பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய, பாடசாலைக் கட்டடத்தொகுதியிலிருந்த பப்பரக்கொப்பான் எனும் தேனீக்கூடு, தற்போது வீசிவரும் கடுமையான காற்றினால் உதிர்ந்து வீழ்ந்தமையினால், பாடசாலை மாணவர்கள் மற்றும், ஆசிரியர்களைத் தாக்கியுள்ளது.

இதனால் பாடசாலையில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த 78இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிலே 45 வரையான மாணவர்களும், சில ஆசிரியர்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதிலும் குறிப்பாக இருமாணவர்களும், ஒரு ஆசிரியருமாக மூவர் மிகமோசமாக தேனிக் கொட்டிற்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தீவிர சிகிச்சைப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தேறியுள்ளதாகவும், எதுவித உயிர் பாதிப்புக்களும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் அறிந்தவுடன் உடனடியாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலை மற்றும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு விரைந்து அங்கு சிகிச்சைபெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்வையிட்டதுடன், நிலமைகள்தொடர்பிலும் கேட்டறிந்தார். அத்தோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களையும் பார்வையிட்டார்.

இந்நிலையில் பாடசாலைச் மூகத்தினரிடமிருந்து கடிதத்தின் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சென்று, பாடசாலை மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாமென வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை மிகக் கடுமையாக எச்சரித்தார்.

அத்தோடு பாடசாலைச் சமூகத்தால் வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்தும் கேள்வி எழுப்பியுமிருந்தார்.
அதேவேளை உடனடியாக பாடசாலைக் கட்டடங்களிலுள்ள தேனீக்கூடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில் 30.05.2025 இன்று இரவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திலுள்ள தேனீக்கூடுகள் அகற்றப்படுமென வனஜீவராசிகள் திணைக்களத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular