ஜூட் சமந்த
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 8,63,680 ‘Pregab’ ரக வலிநிவாரணி மாத்திரைகளை கொஸ்வத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்த மருந்துப் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி உலர்ந்த கருவாடு ஏற்றிச் செல்லும் போர்வையில், லொறி ஒன்றில் இந்த மாத்திரைகள் கொண்டு செல்லப்படுவதாக அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) கல்பிட்டி பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கல்பிட்டியிலிருந்து கொழும்பு வரையான பாதையிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இது குறித்து உஷார்படுத்தப்பட்டன.
கடந்த 25ஆம் திகதி அதிகாலை, நந்தாண்டியா – கொட்டராமுல்ல பகுதியில் உள்ள ஒரு கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த லொறி நிறுத்தப்பட்டிருந்தது. லொறியை ஓட்டி வந்தவர்கள் அதனை அங்கேயே விட்டுச் சென்றதாக நிலைய உரிமையாளர் தெரிவித்தார். எவரும் லொறியை உரிமை கோரி வராத நிலையில், 26ஆம் திகதி அதிகாலை கொஸ்வத்தை பொலிஸார் அந்த லொறியைத் தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.
பொலிஸார் லொறியைச் சோதனையிட்ட போது, மேலோட்டமாகத் தெரிவது போல் 12 கருவாடு பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எனினும், அவற்றின் உள்ளே மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 பெட்டிகளில் இந்த சட்டவிரோத மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
புற்றுநோய் மற்றும் நரம்புப் பாதிப்புகளால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்க மட்டுமே இந்த ‘Pregab’ மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிபுணத்துவ மருத்துவரின் பரிந்துரை இன்றி இதனை எவரும் வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோதமானது என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது லொறியின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர். சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் பெரேரா மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக ஹப்புகொட ஆகியோரின் ஆலோசனையின் கீழ், கொஸ்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் வர்ணகுல உள்ளிட்ட குழுவினர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.




