சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (03) மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேசிய மக்கள் சுதந்திர தினமாக கருதுவது கிடையாது. சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர்.
அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர்.
அதேபோன்று, இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்.
அடிமை சாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களை நிராகரிக்கிற அதேவேளையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
இவ்வாறான நிலைமையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக பார்ப்பது எம்முடைய மரபாக இருக்கிறது.
அந்த வகையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கரிநாளாக அனுஷ்டித்து வருவதுடன், தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை திருநாட்டின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தேசியத்தை அவமதிக்கும் வகையில் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் பெரும் கோபத்தை உண்டுபண்ணியுள்ளதுடன், இனங்களுக்கிடையில் மேலும் முருகளை உண்டுபண்ணும் செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.