ஜப்பானில் சிறப்புத் திறன் கொண்ட பணியாளர் (SSW) திட்டத்தின் கீழ், தாதியர் பராமரிப்புத் துறையில் இலங்கையர்களுக்காக பல வேலை வாய்ப்புக்கள் காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த வேலைகளுக்குத் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பணியாளர்கள், விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக பணியகம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் IM Japan இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்புகளை இலவசமாகப் பெற முடியும்.
இந்த வேலைகள் 5 வருட காலத்திற்கு கிடைக்கும் என்றும், குறைந்தபட்ச சம்பளம் 400,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜப்பான் நாட்டவருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களுக்கும் இந்த வேலை வாய்ப்பினை பெறுபவர்களுக்கும் கிடைக்கும் என்பது இந்த வேலைப் பிரிவின் முக்கிய அம்சமாகும்.
வேலைக்கு விண்ணப்பிக்கும் போது ஜப்பானிய மொழி அறிவு கட்டாயமாகும்.
JFT அல்லது JLPT N4 நிலை மற்றும் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரிகள் உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டும் என்பது கட்டாயம்
உடலில் பச்சை குத்திக்கொள்ளாமல் இருப்பது கட்டாயத் தேவை என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
மேற்கண்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.slbfe.lk/si/ வழியாக பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஜப்பானில் தாதியர் பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட ஒரு குழு நாளை (2) ஜப்பானுக்கு புறப்படவுள்ளது.