தற்போது, இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் விகிதம் அதிகரித்து வருகின்றது.
இந்தநிலையில், கொழும்பில் உள்ள பிரபலமான மகளிர் பாடசாலையொன்றில் பயிலும் ஐந்து மாணவிகள் போதைப்பொருளை உட்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
9ஆம் தரத்தில் பயிலும் மாணவிகள் சிலர் போதைப்பொருளை உட்கொண்டதாகக் குறித்த பாடசாலையின் அதிபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஐந்து மாணவிகளும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, குறித்த ஐந்து பேரில் ஒருவரே போதைப்பொருளை வழங்கியதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். போதைப்பொருளினால் பல்வேறு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.