பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வு நிந்தவூரில் விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமுதுமாணி கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையிலாக நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு அதிதியாக, தேசிய காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர், தற்போதைய அக்கரைப்பற்று மாநகர மாண்புமிகு முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பிரமுகர்கள், அரசியல் ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் என அதிகமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, முஸ்லிம் முழக்கம் ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் “ஓயாத புயலும் சாயாத மரமும்” என்ற நூல், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா அவர்களால் ஆய்வுடன் வெளியிடப்பட்டது.
இந்த நூலின் சிறப்பு பிரதியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள், தேசிய காங்கிரஸ் தலைவர் கௌரவ அதாஉல்லா அவர்களுக்கு வழங்கிய நிகழ்வு, அரங்கத்தை அலங்கரித்தது.
மேலும் நினைவுப் பேருரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் அழைக்கப்பட்டது விசேட அம்சமாகும்.
கால் நூற்றாண்டு கடந்தும் பெருந்தலைவர் அஷ்ரப்பின் வாழ்க்கை மற்றும் அரசியல் பணிகள், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆணிவேராகவே இருக்கின்றது.
இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது நினைவு தினத்தையிட்டு, நேற்று செவ்வாய்கிழமை (16) அட்டாளைச்சேனை , மருதமுனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் நடைபெற்ற ,கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனை நிகழ்வுகளிலும் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


