அப்துல் ஸலாம் யாசீம் – நிருபர்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசை குற்றம் சாட்டும் மிஹிந்தலை பீடாதிபதி!!
மிஹிந்தலை இராஜ மகா விகாரையின் தலைமை விகாராதிபதி, வளவாஹெங்குணாவெவ தம்மரத்ன தேரர், திருகோணமலையில் உள்ள போதிராஜ சம்புத்த ஜயந்தி விகாரையில் நடந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போதைய நிர்வாகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் தெளிவாக இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
சமயத் துறவிகள் தாக்கப்பட்டதாகவும், புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தேரர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசே இந்தச் சம்பவங்களுக்கு நேரடியாகப் பொறுப்பு என்று குற்றம் சாட்டினார்.
“இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, புத்த சாசனத்துக்கு (பௌத்த மதத்திற்கு) ஏற்படக்கூடிய சேதம் குறித்து நாங்கள் எச்சரித்தோம். இவர்களுக்கு வாக்களித்தவர்கள், நாம் இப்போது எதிர்கொள்ளும் நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சம்பவங்கள் குறித்து இப்போது வருத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர், கரகோட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரர், நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், திருகோணமலை போதிராஜ சம்புத்த ஜயந்தி விகாரையில் நடந்த சம்பவம் குறித்து அவர் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விகாரை 1951 ஆம் ஆண்டு முதல் இந்த இடத்தில் இருந்து வருவதாகவும், 2014 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் கட்டளையின் மூலம் கோவில் அதிகாரிகளுக்கு நில உரிமை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். எனவே, அங்குள்ள நிரந்தர துறவிகள் நேற்று பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளானது வருந்தத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


