ஜூட் சமந்த
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 21 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தப்பட்ட சுமார் 21 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் (Kush) மற்றும் ஹஷிஷ் (Hashish) போதைப்பொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,.
13 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மூன்று பயணிகள் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, பத்து பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 10 கிலோகிராம் 394 கிராம் குஷ் மற்றும் 1 கிலோகிராம் 912 கிராம் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 13 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு வர்த்தகர் மற்றும் ஒரு கட்டிடத் தொழிலாளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு வர்த்தகர் ஆவார். இவர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
8 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் மீட்பு இதற்கு முன்னதாக, இன்றைய தினமே (25) அதிகாலை மஸ்கட் நகரிலிருந்து இலங்கைக்கு வந்திறங்கிய மற்றுமொரு பயணி 8 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
37 வயதுடைய இந்த சந்தேகநபர், இரவு விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிபவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த கைது நடவடிக்கைகள், சர்வதேச ரீதியான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.



