2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டிக்கான (T20 World Cup) வெற்றிக்கிண்ணத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்த போது, நல்லூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தினருக்கும் அமைப்பாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் அமைதியற்ற சூழல் நிலவியது.
தெற்கிலிருந்து வெற்றிக்கிண்ணத்தை ஏந்தி வந்த குழுவினர், கோவில் வளாகத்தின் புனிதத்தன்மையைப் பேணாமல், காலணிகளை (Shoes) அணிந்து கொண்டு அங்குமிங்கும் நடமாடியுள்ளனர். இவர்களின் இச்செயலால் அதிருப்தியடைந்த கோவில் நிர்வாகிகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், அக்குழுவினர் கோவில் முழுவதும் ஒழுக்கமற்ற முறையில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தமையும் நிர்வாகத்தினரை கோபமடையச் செய்தது.
“வெற்றிக்கிண்ணத்தை விட எமக்கு கடவுளே முக்கியம்” வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த மதகுரு ஒருவர் அமைப்பாளர்களுடன் வந்திருந்த ஒரு தமிழ் நபரைப் பார்த்து, “எங்களுக்கு இந்த வெற்றிக்கிண்ணத்தை விட எமது கடவுளே மிகவும் பெறுமதியானவர். எனவே, உங்களது பெறுமதியான வெற்றிக்கிண்ணத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக இவ்விடத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கோவிலின் பாரம்பரிய ஆசாரப்படி, உள்ளே நுழையும் ஆண்கள் அனைவரும் மேற்சட்டை அணியாமல் (Bare-chested) நுழைய வேண்டும் என்பது விதியாகும். வெற்றிக்கிண்ணத்தை ஏந்தி வந்த குழுவில் இருந்த சிலர் இந்த விதியைப் பின்பற்ற மறுத்ததால், அங்கு மீண்டும் ஒரு குழப்பான சூழ்நிலை உருவானது.
இதனைத் தொடர்ந்து, அக்குழுவினர் மிகுந்த ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதாக இணங்கியதையடுத்து, வெற்றிக்கிண்ணம் கோவிலில் வைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தவுடன் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், இந்த கசப்பான சம்பவத்தை அடுத்து, கோவிலின் கலாசார விழுமியங்களையும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் மதிக்காத எந்தவொரு குழுவினருக்கும், எதிர்காலத்தில் கோவில் வளாகத்திற்குள் எவ்விதமான நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என நல்லூர் கோவில் நிர்வாக சபை அதிரடியாகத் தீர்மானித்துள்ளது.


