இலங்கை மக்கள் நீண்டகாலமாகச் சுமந்து வரும் பாரிய பொருளாதாரச் சுமைகளில் ஒன்றான மின்சாரக் கட்டண விவகாரத்தில், தற்போது ஒரு புதிய நம்பிக்கை ஒளி தென்படத் தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பாராளுமன்றத்தில் நேற்று (05) உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்திச் செலவைக் குறைக்காமல், நுகர்வோருக்கான கட்டணத்தைக் குறைக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கம் பொறுப்பேற்ற போது ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 37 ரூபா செலவான நிலையில், தற்போது அது 29 ரூபாவாக (22%) குறைக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்திச் செலவை மேலும் 25 ரூபா வரை குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு வெறும் வாக்குறுதிகளை மட்டும் வழங்காமல், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டங்களையும் அரசாங்கம் வகுத்துள்ளது.
இதன்படி, தேசிய மின் கட்டமைப்பில் சூரிய மற்றும் காற்று போன்ற இயற்கை எரிசக்தி ஆதாரங்களை அதிகளவில் உள்வாங்குதல், தேசிய மின் விநியோக மற்றும் கடத்தல் கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதுடன், எரிசக்தி சேமிப்பு வசதிகளை (Storage systems) அறிமுகப்படுத்துதல், காலாவதியாகும் மின் நிலையங்களுக்குப் பதிலாக நவீன வெப்ப மின் நிலையங்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மின் நிலையங்களை நிறுவுதல், தற்போது இயங்கி வரும் நீர் மின் நிலையங்களின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்கள் வெற்றியடையும் பட்சத்தில், ஒவ்வொரு சாதாரணக் குடும்பமும் தமது மாதாந்த வரவு செலவுத் திட்டத்தில் மின்சாரத்திற்காகச் செலவிடும் தொகை கணிசமாகக் குறையும். இருளில் தவிக்கும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பெரும் நிம்மதியையும், ஒளிமயமான எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் வழங்கியுள்ளது.


