புத்தளத்தில் வாடகைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தளம் – ரத்மல்யாய 4ஆம் குறுக்குவைச் சேர்ந்த 72 வயதுடைய அப்துல் லத்தீப் என்பவரே இவ்வாறு கழுத்து பகுதியில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர், நேற்று 21 ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்தபோது, வாடகை பயணம் ஒன்றிற்காக மர்ம நபர் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று 22 ஆம் திகதி அதிகாலை புத்தளம் – அல்-காசிம் சிட்டிக்கு அருகிலே அடப்பனா வில்லுவ பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்ட பிரதேசவாசி ஒருவர் இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உயிரிழந்தவரின் உறவினர்கள், அது காணாமல் போன முச்சக்கரவண்டி உரிமையாளருடைய சடலம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கொலையின் போது அப்துல் லத்தீப் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி அல்-காசிம் சிட்டி பள்ளிவாசலுக்கு அருகாமையில் கண்டறியப்பட்டுள்ளதுடன், இது திட்டமிட்ட ஒரு கொள்ளைச் சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நடைபெறவுள்ளதுடன், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




