மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி பயன்படுத்திய தெஹ்ரானில் உள்ள நிலத்தடி இராணுவப் பதுங்கு குழியை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தகர்த்துள்ளன. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளியை IDF சனிக்கிழமை பகிர்ந்துள்ளது.
‘ஆபரேஷன் ரோர் ஆஃப் தி ஹாரியர்’ (Operation Roar of the Harrier) என்ற நடவடிக்கையின் கீழ், சுமார் 50 இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் தெஹ்ரானில் உள்ள ஈரானிய தலைமை வளாகத்திற்கு கீழே இருந்த இந்த நிலத்தடி பதுங்கு குழியை அழித்தன. அவசர காலங்களில் போர் நடவடிக்கைகளை வழிநடத்துவதற்காக ஒரு பாதுகாப்பான இடமாக இது கட்டப்பட்டிருந்தது. கமேனியின் மறைவிற்குப் பிறகு, இந்த வளாகம் ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளின் தளமாகச் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏழாவது நாளை எட்டியுள்ள இந்தப் போர், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் வேகமாகப் பரவி, உலகளாவிய எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. இதனை “ஆட்சியின் உள்கட்டமைப்பை” குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. லெபனான் மற்றும் ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ள இஸ்ரேல், போரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்போவதாக உறுதியளித்துள்ளது.
தொடர் தாக்குதல்களால் ஈரானின் சாதாரண மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நெட்பிளாக்ஸ் (Netblocks) அமைப்பின் தகவல்படி, ஈரானில் இணைய இணைப்பு ஒரு சதவீதமாகக் குறைந்துள்ளது, இது போரின் பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியேறுவதைத் தடுக்கிறது. தெஹ்ரானின் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டாலும், பாதுகாப்புப் படைகள் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாட்டை வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


