ஜூட் சமந்த
லுனுவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் கஹட்டவில – மெல்லவ பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஜே. ஜி. பியதாச என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தானது கடந்த 24 ஆம் திகதி இரவு தும்மலதெனிய – கிணிகல்போல வீதியில் பண்டாரநாயகபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சாரதி நிலைதடுமாறியதே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுவில பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.


