எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் 98% கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே வாங்குவதால், ஈரான் -அமெரிக்கா இஸ்ரேல், இடையேயான போரால் பெட்ரோல், டீசலின் விலை அந்நாட்டில் இருமடங்கு அதிகரித்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் உலகளவில் கடும் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. இதன் நேரடி விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிபொருள் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதுடன், அதன் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் விண்ணைத் தொட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நாடு முழுவதும் தேசிய எரிசக்தி அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. நாட்டின் தற்போதைய கையிருப்பு வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


