பயிற்சிகளை நிறைவுசெய்த ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகள் 402 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (28) கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப்படிப்பு பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மருத்துவ பீடம், கம்பஹா விக்ரமாராச்சி உள்நாட்டு மருத்துவ பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடங்களில் ஐந்தாண்டு கால மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கே குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இவர்கள் 2017–2018 ஆம் கல்வியாண்டுகளில் கல்விப் பொதுத்தராதரப் பத்திரப் படிப்பை மேற்கொண்டவர்களாவர். தெரிவு செய்யப்பட்ட 402 பட்டதாரிகளில் 249 பேர் ஆயுர்வேதத் துறையையும், 109 பேர் சித்த மருத்துவத் துறையையும், 44 பேர் யுனானி மருத்துவத் துறையையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டதாரிகள் போதனா வைத்தியசாலைகள், ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் ஓராண்டு காலத்திற்கு உள்ளக பயிற்சியைப் பெறு உள்ளனர். விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் முதலாம் தர வைத்தியர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
பயிற்சிக் காலத்தின் போது, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதுடன், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் அதிகாரிகள், ஆயுர்வேத மருத்துவ சபையில் தங்களை ஆயுர்வேத வைத்தியர்களாகப் பதிவு செய்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, வளர்ந்து வரும் ஒரு நாடாக இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல கடுமையான நிதி ஒழுக்கம் அவசியம் என வலியுறுத்தினார்.
‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க திறைசேரியினால் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுகளுக்காக வரலாற்றில் மிக அதிக தொகையான 2000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அனைத்துப் பட்டதாரிகளையும் சுகாதார அமைச்சு நேரடியாக உள்வாங்கும் நிலை இனி இருக்காது என அமைச்சர் தெளிவுபடுத்தினார். தற்போது மேற்குலக மருத்துவப் பட்டதாரிகளுக்கும் வெற்றிடங்கள் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட பொறிமுறையின் ஊடாகவே சேவையில் இணைய வேண்டிய சூழல் ஏற்படும் என அவர் எச்சரித்தார்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமந்தி ரணசிங்க, ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தீப்தி சுமனசேன மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



