போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நபர் ஒருவர், இனந்தெரியாத கும்பலால் இரும்புத் தடியால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாரவிலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாரவிலை – குருசப் பள்ளிப் பகுதியைச் சேர்ந்த பொன்னம்பெருமகே ஸ்ரீலால் பெர்னாண்டோ (60 வயது) என்பவரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில், மாரவிலை பகுதியில் வைத்து இவருக்கும் ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது அக்குழுவினர் இரும்புத் தடிகளால் ஸ்ரீலால் பெர்னாண்டோவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மாரவிலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 01 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
உயிரிழந்த ஸ்ரீலால் பெர்னாண்டோ, குருசப் பள்ளிப் பகுதியில் ஒரு கும்பலால் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த எதிர்ப்பு காரணமாகவே அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு மாரவிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த


