தேசிய மக்கள் சக்தியின் “அனைவருக்கும் பாதுகாப்பான தங்குமிடம்” எனும் தூரநோக்கிற்கு அமைவாக, புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தம்மன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறிய குடும்பம் ஒன்றுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று இன்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NHDA) நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிரந்தர வீட்டை, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளிடம் கையளித்தார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தகுதியான குடும்பங்களை அடையாளங்கண்டு, அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் நீண்டகால வீட்டுக்கனவு இதன் மூலம் நனவாக்கப்பட்டுள்ளது.
புதிய வீட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பிரஜா சக்தி தலைவர் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான நிமேஸ், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா, தேசிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள், தம்மன்னகம கிராம உத்தியோகத்தர் மற்றும் அரச அதிகாரிகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
புதிய வீட்டினைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், தங்களின் வாழ்வாதாரத்தைச் சீரமைக்க அரசு வழங்கிய இந்த உதவிக்குத் தமது நெகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.





