இலங்கையின் எதிர்கால சந்ததியினரை சவால்கள் நிறைந்த உலகிற்கு தயார்படுத்தும் வகையில், சிறுவர் பாடசாலை கல்வி முறையில் அவசர சீர்திருத்தங்கள் அவசியம் என்றும், நீண்டகாலமாக சேவை ஆற்றிவரும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்ற முதுமொழியைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், தற்போதைய சூழலில் சிறுவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்தார். தற்போது மூன்று வயதிலேயே சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை ஆரம்பிப்பதும், இரண்டு வருடங்கள் அங்கு கல்வி கற்பதும் ஆரோக்கியமானது அல்ல என ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினர்.
நேற்றைய பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துகொண்டு வாய்மொழிமூலமாக கேள்வி எழுப்பியபோதே கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய அவர்களின் கவனத்திற்கு குறித்த விடயங்களை அவரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்;
சிறுவர் பாடசாலைக் கல்வியை முறைப்படுத்தி, முதலாம் தரத்தில் இணைவதற்கான வயதை 5 ஆகக் குறைப்பது குறித்து ஆய்வு செய்தல், தனியார் மற்றும் பிரதேச சபைகளின் கீழ் இயங்கும் சிறுவர் பாடசாலைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, நாடு முழுவதற்கும் பொதுவான கல்வி முறையை உருவாக்குதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தனியார் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதால், அரச மற்றும் பிரதேச சபை பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை உறுதி செய்ய வேண்டும்.
யுத்தம் நிலவிய காலப்பகுதியிலும், அதற்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளிலும் வடக்கு, கிழக்கு மற்றும் எல்லைக் கிராமங்களில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தொண்டர் ஆசிரியர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். கடந்த அரசாங்கத்தின் போது இவர்களுக்கான நிரந்தர நியமன அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், தேர்தல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வடக்கு மாகாணத்தில் சுமார் 150 பேரும், கிழக்கு மாகாணத்தில் 300 முதல் 400 பேரும் அரசியல் காரணங்களால் நிரந்தர நியமனம் மறுக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நீண்டகாலமாக அரச சேவைக்காகக் காத்திருந்த நிலையில், தற்போது பல ஆசிரியர்கள் அரச பணிக்கான வயது எல்லையைத் தாண்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு நீதி வழங்கவும் ஒரு விசேட குழுவை நியமித்து ஆராய வேண்டும் என வலியுறுத்திய மஸ்தான், அவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும் அல்லது ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தற்போதைய அரசாங்கம், இந்த ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு உள ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிம்மதியை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய, இலங்கையின் கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், முன்பள்ளி கல்விக்கான புதிய சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய கொள்கைகளை அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
தற்போதைய கல்வி முறையின்படி, 5 வயது பூர்த்தியடைந்த சிறுவர்கள் பாடசாலைகளில் தரம் 1 இல் சேர்க்கப்படுகிறார்கள். இந்நிலையில், 3 மற்றும் 4 வயதுடைய சிறுவர்களின் முன்பள்ளி கல்வியை முறைப்படுத்தும் வகையில் 2027 ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாய் மொழிமூலமான கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய;
இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளை கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுடன் இணைந்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஒத்துழைப்போடு முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, 2025 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) “தேசிய ஆரம்ப சிறுவர் பருவ கல்விக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு” அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் மாதிரிச் செயல்பாட்டுத் தொகுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாகாண மட்டத்தில் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டுக்குள் முன்பள்ளி கல்விக்கான முழுமையான தேசிய கொள்கையொன்றை ஸ்தாபிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் பெரும்பாலான முன்பள்ளிகள் தனியார் துறையினரால் நடத்தப்படுவதால், அங்குள்ள ஆசிரியர்களுக்கு நிலையான சம்பளம் அல்லது நிரந்தர நியமனங்களை வழங்குவதில் கல்வி அமைச்சுக்கு சட்ட ரீதியான வரையறைகள் உள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், மாகாண சபைகளினால் தெரிவு செய்யப்பட்ட சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், விசேடமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும், அங்குள்ள சிறுவர்கள் கல்வி கற்பதில் எதிர்கொள்ளும் சவால்களையும் அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், இது குறித்து ஆராய விசேட குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு மாகாணப் பாடசாலையும் தேசியப் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்படவில்லை என குறிப்பிட்ட கல்வி அமைச்சர், 4,700 தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்குவதற்கு 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அமைச்சரவை தீர்மானங்களை மேற்கொண்டிருந்ததாக்க சுட்டிக்காட்டினார்.
அதன் பின்னர் புதிய தொண்டர் ஆசிரியர்கள் எவரும் கல்வி அமைச்சினால் நேரடியாக இணைத்துக்கொள்ளப்படவில்லை எனவும், முன்பள்ளி கல்வித் துறையை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுடன் மாதாந்தம் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


