தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ள விஜய், கவர்னர் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும், “118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை உறுதிப்படுத்தாமல் ஆட்சியமைக்க அழைக்க முடியாது” என்று ஆளுநர் கறாராகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, த.வெ.க நிர்வாகிகள் வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஆதரவு கோரிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மறுபுறம், அ.தி.மு.க-வுக்கு தி.மு.க வெளியிலிருந்து ஆதரவு அளித்து, த.வெ.க-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இது த.வெ.க தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் நடவடிக்கை மற்றும் திராவிடக் கட்சிகளின் வியூகங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், த.வெ.க ஒரு அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளது. “தனிப்பெரும் கட்சியான எங்களை ஆட்சியமைக்க அழைக்காமல், தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயன்றால், எங்களது 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள்” என த.வெ.க எச்சரித்துள்ளது.
இந்த முடிவு எடுக்கப்பட்டால் இந்திய அரசியலமைப்பு வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 108 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறையாகும்.
108 பேர் ராஜினாமா செய்தால், சட்டசபையின் மொத்த பலம் 126 ஆகக் குறையும். அப்போது வெறும் 64 எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலே ஒருவர் முதலமைச்சராக முடியும். இது தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையக்கூடும் என்றாலும், மக்கள் மத்தியில் அது பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும்.
எம்.எல்.ஏ-க்களாகப் பதவியேற்பதற்கு முன்பே ராஜினாமா செய்வது சட்ட ரீதியான சிக்கல்களை உருவாக்கும். மேலும், 108 தொகுதிகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது அரசுக்கு பெரும் நிதிச்சுமையை உண்டாக்கும்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடிப்பதாலும், த.வெ.க ராஜினாமா அஸ்திரத்தை ஏந்துவதாலும் தமிழகத்தில் ஒரு நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்தச் சூழலில், எந்தக் கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், சட்டப்பிரிவு 356-ன் கீழ் ஆளுநர் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
“பதவி ஆசை எங்களுக்கு இல்லை” என்பதை மக்கள் முன் நிரூபிக்க த.வெ.க இந்த முடிவை எடுக்கத் துணிந்துள்ளது. மறுபுறம், “விஜய் ஒருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால் அவரை அசைக்க முடியாது” என்ற அச்சத்தில் திராவிடக் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. வரும் மே 10-ஆம் தேதி வரை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சென்னையிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் விஜய்யா? அல்லது தமிழகம் குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கிச் செல்கிறதா? என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.


