அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மெட்ரோ பேருந்து’ திட்டத்திற்காக சுமார் 7 பில்லியன் ரூபா பொதுப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, மெட்ரோ பேருந்து திட்டம் என்பது இலங்கை போக்குவரத்துச் சபையின் தற்போதைய முறையை வேறொரு பெயரில் அறிமுகப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை எனத் தெரிவித்தார்.
இலங்கையின் பயணிகள் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச் சபையினால் சீரழிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை போக்குவரத்து சபையின் காரணமாகவே இலங்கையில் போக்குவரத்துத் துறை அழிந்தது. இப்போது மெட்ரோ பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் மீண்டும் அதே தவற்றைச் செய்கிறது” என அவர் சாடினார்.
இந்தத் திட்டத்தின் ஊடாக திறைசேரியின் நிதி சூறையாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதனை ஒரு ‘தேசியக் குற்றம்’ என வர்ணித்தார்.
புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதால் பொதுப் போக்குவரத்தில் நிலவும் முறையான சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்காது எனவும், இது பழைய தோல்விகளையே மீண்டும் பிரதிபலிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அர்த்தமுள்ள மேம்பாடுகள் எதனையும் வழங்காமல், மக்களின் வரிப்பணத்தை மாத்திரம் இந்தத் திட்டம் வீணடிப்பதாக அவர் மேலும் வாதிட்டார்.


