தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அலிகார் தேசியப் பாடசாலைக்கு கையளிக்குமாறும், பொலிஸ் நிலையத்தை நகர சபையினால் ஒதுக்கப்பட்டுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று (07) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஏறாவூர் கல்விச் சமூகத்தின் நீண்டகாலத் தேவையொன்றை வலியுறுத்திப் பேசினார்.
“அண்மையில் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த வேளையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர சபைத் தவிசாளருமான எம்.எஸ். நளீம் இவ்விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு நேடியாகக் கொண்டு சென்றார். இதன்போது, பொலிஸ் நிலையத்தை இடமாற்றம் செய்வது குறித்த இணக்கப்பாடும், அனுமதியும் அமைச்சரினால் வழங்கப்பட்டது என குறிப்பிட்டார்.
அலிகார் தேசியப் பாடசாலையின் தற்போதைய நிலைமை குறித்து விபரித்த அவர், அங்கு 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருவதைச் சுட்டிக்காட்டினார். மாணவர் எண்ணிக்கைக்கேற்ப போதிய கட்டிட வசதிகள் இல்லாமையினால் ஆசிரியர்களும் மாணவர்களும் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“மாணவர்களின் கல்வி நலன் என்பது மிக முக்கியமானது. தற்போதுள்ள இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொலிஸ் நிலையக் காணி பாடசாலைக்கு வழங்கப்படுவது அவசியமாகும். இதற்காக ஏறாவூர் நகர சபையினால் பொலிஸ் நிலையத்திற்கென புதிய காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.”
பொலிஸ் நிலையத்தை புதிய இடத்திற்கு மாற்றுவதன் மூலம், அலிகார் தேசியப் பாடசாலையின் கட்டிடத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவித்த கலாநிதி ஹிஸ்புல்லாஹ், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இந்த விவகாரத்தில் உரிய அமைச்சர் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தனது உரையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.


