ஒப்பந்தம் ஒன்றை இரத்து செய்யாமல் இருப்பதற்காக 30 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் நேற்று (2026.05.08) மாலை 6.00 மணியளவில் பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சம்பவத்தின் பின்னணி
பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. முறைப்பாட்டாளர் குருநாகல் பேருந்து நிலையம் மற்றும் வர்த்தக தொகுதியின் பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருந்தார்.
எனினும், குறித்த பேருந்து நிலைய கழிப்பறைத் தொகுதிக்கான நீர் கட்டணத்தில் 40 இலட்சம் ரூபாய் நிலுவை காணப்பட்டதைக் காரணம் காட்டி, அந்த துப்புரவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய குருநாகல் மாநகர சபை தீர்மானித்திருந்தது.
இலஞ்சக் கோரிக்கை
இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதைத் தடுத்து, ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு உதவி புரிய பிரதி மேயர் மொஹமட் மொயினுதீன் மொஹமட் அசார்தீன் என்பவர் இலஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது:
- முதலில் ஒப்பந்தத்தை இரத்து செய்யாமல் இருக்க 50 இலட்சம் ரூபாய் கோரப்பட்டது.
- ஒப்பந்தப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல மாதந்தோறும் 5 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- இறுதியில், ஆரம்பமாக கோரப்பட்ட 50 இலட்சம் ரூபாயில், 30 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொள்ள பிரதி மேயர் சம்மதித்துள்ளார்.
கைது நடவடிக்கை
குறித்த 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட போதே, இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அவர் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



