சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு தமிழக முதல்வராக ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றார் விஜய்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் புதிய அரசு ஆட்சி அமைத்தது. புதிய அரசு பதவியேற்பு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது. கோட் சூட் அணிந்து, தமிழக முதல்வராக, இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதவி ஏற்றார். அவருக்கு தமிழக கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜோசப் விஜய் என்னும் நான் ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்று கொண்டார் விஜய். அவர் ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லும் போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். விசில் சத்தம் விண்ணை பிளந்தது. தமிழகத்தில் ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை, இதுவரை, 12 முதல்வர்கள் இருந்துள்ளனர். நபர்கள் அடிப்படையில், 13வது முதல்வராக விஜய் பதவியேற்றார்.
முன்னதாக, நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் பலத்த பாதுகாப்புடன் வந்தார். வழிநெடுகிலும் விஜய்க்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை பார்த்து விஜய் காரில் இருந்த படியே கை அசைத்தார். கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து, பதவியேற்பு விழாவுக்கு நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தார் விஜய்; அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்தததை அடுத்து அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
அந்த வகையில் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் ஆதவ்அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தலைமைச் செயலகத்திற்கு வந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக பதவியேற்ற விஜய், நேரு ஸ்டேடியத்தில் இருந்து நேராக தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டதையடுத்து முதல்வர் அறைக்குச் சென்ற விஜய், அங்கு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.


