ஜூட் சமந்த
முந்திரி தோட்டத்தில் பதற்றம்: அறுவடைக்கு சென்றவர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் தாக்கியதாக புகார்!
வனாதவில்லுவ, ஜூன் 14: குத்தகை அடிப்படையில் பெற்றிருந்த முந்திரி (கஜூ) தோட்டத்தில் அறுவடை மேற்கொள்ளச் சென்ற குழுவினர் மீது முரட்டுத்தனமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வனாதவில்லுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஜூன் 13ஆம் திகதி மாலை இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் குத்தகைதாரரான மொஹமட் நிபாஸ் மொஹமட் (30) மற்றும் அவரது ஊழியர்களான ஆர்.எம். ரிஷான் (19), ஐ.எம். ருக்ஷான் (25) ஆகிய அனைவரும் கல்பிட்டி – ஏத்தாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.
காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னணியில் கொலைச் சம்பவம்?
சிலாபம் தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான வனாதவில்லுவ – கரதீவு, பகுதியில் அமைந்துள்ள முந்திரி (கஜூ) தோட்டம், கல்பிட்டி ஏத்தாலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த நிலையில், தோட்டத்தின் பாதுகாப்பிற்காக பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 9ஆம் திகதி அதிகாலை சுமார் 1.30 மணியளவில் முந்திரி (கஜூ) சேகரிப்பதற்காக சட்டவிரோதமாக தோட்டத்திற்குள் நுழைந்ததாக கூறப்படும் ஒருவரை பாதுகாப்பு பணியாளர்கள் தடுத்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட தகராறை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சூட்டில் அதுகோரலகே பிரதீப் சுசந்த (38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்.
“குடும்பத்திற்காக கஜூ சேகரிக்கச் சென்றார்” – கிராம மக்கள் குற்றச்சாட்டு
உயிரிழந்த பிரதீப் சுசந்த, கரதீவு ஏரிப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்றும், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக முந்திரி (கஜூ) சேகரிக்கச் சென்றபோது முதலில் தாக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தோட்டத்தில் பணியாற்றிய நான்கு பாதுகாப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பழிவாங்கும் தாக்குதலா?
இந்நிலையில், தாம் குத்தகைக்கு பெற்றிருந்த தோட்டத்தில் முந்திரி (கஜூ) அறுவடை செய்யச் சென்றபோது சுமார் 100 பேர் கொண்ட குழுவொன்று திடீரென தாக்குதல் நடத்தியதாக குத்தகைதாரர் மொஹமட் நிபாஸ் மொஹமட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம், முன்னர் இடம்பெற்ற உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பழிவாங்கும் நடவடிக்கையா என்ற கோணத்திலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாதவில்லுவ பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு முந்திரி (கஜூ) தோட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்த மோதல், உயிரிழப்பு, கைது மற்றும் பெரும் தாக்குதல் வரை சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


