புத்தளம் மாவட்டத்தின் புதிய சுகாதாரப் பேரொளி: விசேட வைத்திய நிபுணர் திமுத் பொன்வீர கடமைகளைப் பொறுப்பேற்றார்!
புத்தளம் மாவட்டத்தின் சுகாதாரத் துறையில் ஒரு புதிய வசந்தம் ஆரம்பமாகியுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, பிரபல விசேட வைத்திய நிபுணர் திமுத் பொன்வீர அவர்கள் சுகாதார அமைச்சினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் உன்னத நோக்கோடு, அவர் இன்று (ஜூன் 17) மாதம்பையில் அமைந்துள்ள மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பல்வேறு சமூக மற்றும் சுகாதாரத் துறை பிரமுகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. மதத் தலைவர்களின் ஆசிர்வாதங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், புத்தளம் மாவட்டத்தின் மருத்துவ மையங்களின் பிரதானிகள், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள்ம் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு புதிய பணிப்பாளருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சுகாதாரத் துறையின் முக்கிய தூண்கள் ஒருங்கே வாழ்த்து!
புதிய பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் திமுத் பொன்வீர அவர்கள் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க, பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தினேஷ் கொக்கலகே மற்றும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் லசந்த லியனகே ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதிய பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ், புத்தளம் மாவட்டத்தின் சுகாதாரச் சேவைகள் மேலும் பலமடையும் என மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த


