“உங்கள் வீட்டில் பயங்கரமான பூத தோஷம் இருக்கிறது, அதனால்தான் குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள்”, உங்கள் வீட்டின் அடியில் பெரும் புதையல் இருக்கிறது எனக்கூறி இடம்பெற்ற பெரும் மோசடி சம்பவம் சிலாபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
சிலாபம், கொட்டவெஹெர – திகன்வெவ பகுதியைச் சேர்ந்த அபேசிங்க ஹேரத் முதியான்சேலாகே நிலாந்தி குமாரி அபேசிங்க என்ற பெண்ணின் வீட்டுக்கு, நவீன ‘ஸ்கேனர்’ (Scanner) இயந்திரத்துடன் வந்த மர்ம நபர் ஒருவர், வீட்டின் முற்றத்தை சோதிப்பது போல பாசாங்கு செய்துவிட்டு, அந்தப் பெண்ணிடம் சொன்ன வார்த்தைதான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிரவைத்துள்ளது.
“உங்கள் வீட்டில் பயங்கரமான பூத தோஷம் இருக்கிறது, அதனால்தான் குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள்” என்று கூறி பீதியை கிளப்பியுள்ளார்.
அத்தோடு நிறுத்தாமல், “அந்தப் பூதம் உங்கள் வீட்டின் அடியில் உள்ள பெரும் புதையல் ஒன்றை பாதுகாத்து வருகிறது, அந்தப் புதையலின் உண்மையான சொந்தக்காரர் நீங்கள்தான்” என ஆசையைத் தூண்டியுள்ளார்.
பேய் பயமும் 42 இலட்சம் ரூபாய் புதையலும்!
மந்திரவாதியின் பேச்சை அப்படியே நம்பிய அந்தப் பெண், வீட்டின் தோஷத்தை நீக்கி புதையலைத் தோண்டி எடுப்பதற்குச் சம்மதித்துள்ளார். இதற்காக முதற்கட்ட செலவு மற்றும் சடங்குகளுக்காகப் போலிச் சாமியாரால் கோரப்பட்ட 42 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு பவுன் தங்க நகையை அந்தப் பெண் தட்டாமல் கொடுத்துள்ளார்.
பணம் கைக்கு வந்ததும், பிரதான சந்தேக நபர் ஒரு விசேட மந்திரவாதி மற்றும் மேலும் மூன்று கூட்டாளிகளை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அழைத்து வந்து நள்ளிரவில் விசேட சாந்திகர்மம் (பூஜை) ஒன்றை நடத்தியுள்ளார். பூஜையின் உச்சக்கட்டத்தில், புதையலில் இருந்து எடுத்ததாகக் கூறி இரண்டு புத்தர் சிலைகளையும், சில மாணிக்கக் கற்களையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்து நம்பவைத்துள்ளனர்.
முன்னேஸ்வரம் காளி கோவிலில் உடைந்த மர்மம்: போலி நகைகள் அம்பலம்!
நாடகம் இத்துடன் முடியவில்லை. புதையலில் கிடைத்த சிலைகளையும் மாணிக்கக் கற்களையும் சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சுடுகாட்டு காளி கோவிலுக்கு எடுத்துச் சென்று விசேட பூஜை செய்ய வேண்டும் என சாமியார் கட்டளையிட்டுள்ளார். அதன்படியே அந்தப் பெண்ணும் சிலைகளுடன் முன்னேஸ்வரம் கோவிலுக்குச் சென்று காத்துக்கொண்டிருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் சாமியார் கும்பல் அங்கு வரவில்லை.
அங்கேயே பெண்ணுக்கு சந்தேகம் தொற்றிக்கொண்டது. உடனடியாகத் தனக்குக் கிடைத்த புத்தர் சிலைகளையும் மாணிக்கக் கற்களையும் சோதித்துப் பார்த்தபோது, அவருக்குப் பேரிடி காத்திருந்தது. அந்தச் சிலைகள் எவ்வித பெறுமதியுமற்ற ஏதோ ஒரு சாதாரண உலோகத்தால் செய்யப்பட்டவை என்பதும், மாணிக்கக் கற்கள் யாவும் போலியானவை என்பதும் அம்பலமானது.
அதிரடி வேட்டையில் இறங்கிய சிலாபம் போலீஸ்: கம்பி எண்ணும் கும்பல்!
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், உடனடியாகச் சிலாபம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பெரேராவிடம் முறையிட்டார். அவரின் நேரடி உத்தரவின் பேரில், கொட்டாஞ்சேனை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஹிந்த குணசேன தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் மின்னல் வேக விசாரணையில் இறங்கினர்.
வனாத்தவில்லுவ, மதுரங்குளி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் மறைந்திருந்த ஐந்து சந்தேக நபர்களையும் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் 14 இலட்சம் ரூபாய், உருக்கப்பட்ட நிலையில் ஒரு தங்கப் பவுன், போலிச் சிலைகள், போலி மாணிக்கக் கற்கள் மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் அனைவரும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தகவல்: ஜூட் சமந்த



